Wednesday 27 October, 2010

காதலியில்லாக் காதல்…

உறங்கியதும் கனவுத்திரை விரிகிறது,
தோழர்கள், தோழிகள், உறவினர்கள் என
விளையாடிட வருபவர்களிடமெல்லாம்
‘அவள் வரும் நேரமிது. மன்னியுங்கள்’ எனக்
கூறி வழியனுப்பிவிடுகிறேன், என்றுமே வந்திடாத
நீ என்னும் உன்னை யாரென்று தெரியாமலே

வேகத்தடைப் பயணம், கூட்டமில்லா திரையரங்கம்
கிழக்குக் கடற்கரை சாலையில் குழம்பியகம்
மெல்லிய சாரலில் நெடுந்தூரப்பயணம் என
ஒவ்வொன்றும் உன் நினைவை தூண்டிடத் துடிக்கின்றன
நீ என்னும் உன்னை யாரென்று தெரியாமலே

இந்தப் பதிவில் உன் பெயரினை அறிவித்திட வேண்டும்
அடுத்த பதிவிலாவது நிச்சயம் அறிவித்தேயாக வேண்டுமென
எனக்குள் நானே நினைத்துக் கொண்டிருக்கிறேன்
உன் பெயர் கூட எனக்குத் தெரியாத
நீ என்னும் உன்னை யாரென்று தெரியாமலே

உனக்காக எழுதப்பட்ட குறுந்தகவல்கள்
காதலர் தினங்களில் வாங்கப்பட்ட பரிசுகள்
உன்னுடன் பகிர்வதற்கான சந்தோஷங்கள், துக்கங்கள்
என அனைத்துமே உனக்காக காத்திருக்கின்றன
நீ என்னும் உன்னை யாரென்று தெரியாமலே

இத்துனை நாளாய் கிறுக்கிய கிறுக்கல்கள் யாருக்கானவை
எனக் கேட்டிடும் நட்பு வட்டங்களிடம் கூறாவிடினும்
‘உனக்காகத்தான்’ என உன்னிடமாவது கூறிவிடத் துடிக்கிறேன்
நீ என்னும் உன்னை யாரென்று தெரியாமலே

1 comment:

  1. "இத்துனை நாளாய் கிறுக்கிய கிறுக்கல்கள் யாருக்கானவை ?! " !!!!

    ReplyDelete